விஜய் - சீமான் இருவரும் இணைந்து படம் செய்வார்கள் என்ற கதை நீண்ட காலமாகவே அடிபட்டு வந்தாலும் விஜய் தொடர்ச்சியாக வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது 'காவல்காரன்" படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்தாக 'வேலாயுதம்" படத்தில் நடிப்பார் என்ற அறிவிப்புக்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 'த்ரீ இடியட்ஸ்" படத்தில் நடிப்பார் என்ற கதையும் இருந்து வருகின்றது. இந்நிலையில் சீமான், விஜயின் படத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்த சீமான், அண்மையில் தனியாக கட்சி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவ்வப்போது சினிமா நிகழ்வுகளிலும் தலை காட்டி வந்தார். இறுதியாக 2008ஆம் ஆண்டு மாதவன் - பாவனா இருவரையும் வைத்து 'வாழ்த்துக்கள்" என்ற படத்தை இயக்கியிருந்தார். பின்னர் இடையே ஒரு சில திரைப்படங்களிலும் தலை காட்டியிருந்தார். அரசியலில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் சினிமா மீது கொண்ட பற்று அவரை விட்டு என்றுமே நீங்கியதில்லை.

இந்த நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் படமொன்றை இயக்க தயாராகின்றார். படத்திற்கான தலைப்பாக 'கோபம்" எனப் பெயரிட்டிருக்கிறார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தில் நாயகனாக விஜய் நடிக்க இருக்கின்றார். மிகவும் ஆக்ரோஷம் மிக்க ஒரு இளைஞனின் வாழ்க்கையை தனக்கே உரித்தான பாணியில் தரக் காத்திருக்கின்றார் சீமான். (ஏற்கனவே தம்பி படமும் அவ்வாறான ஒரு இளைஞனின் கதையே!) நிச்சயம் இந்தக் கதை இளைஞர்களை பாதிக்கும் என்ற நம்பிக்கையில் சீமான் களமிறங்கியுள்ளார். இந்த பிரவேசம் சீமானின் அரசியல் வாழ்க்கைக்கோ, அல்லது விஜயின் (தந்தையின்) அரசியல் வாழ்க்கைக்கோ உறுதுணையாகவும் அமையக் கூடும்.
இந்த செய்தியை அண்மையில் சீமான் உறுதி செய்துள்ளார். படத்தை வி.கிரியேஷனல் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்க்கு சச்சின் படத்தையும் தயாரித்தவர். செழியன் ஒளிப்பதிவு இயக்குனராக கடமையாற்றவுள்ளார்.
No comments:
Post a Comment